This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
11.037 ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை ( ) |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
11.037  
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர் இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய
| [1] |
புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக் கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்
| [2] |
குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்
| [3] |
கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த் தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த
| [4] |
காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய
| [5] |
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள் துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய
| [6] |
வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள
| [7] |
நிலவு மலணையினின்றிழிந்த சங்கம் இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய
| [8] |
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய
| [9] |
பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன் தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்
| [10] |
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும் தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த
| [11] |
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித் திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்
| [12] |
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்
| [13] |
கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத் தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட
| [14] |
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு
| [15] |
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்
| [16] |
றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும் கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு
| [17] |
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு
| [18] |
மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும் இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத
| [19] |
கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும் வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்
| [20] |
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும் கேதையும் எங்கும் கெழீஇப் போதின் | [21] |
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்
| [22] |
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும் சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்
| [23] |
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்
| [24] |
நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும் அந்தமில் சீரார் அழகினால் முந்திப்
| [25] |
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ
| [26] |
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர
| [27] |
இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில் மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்
| [28] |
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும் காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்
| [29] |
வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்
| [30] |
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய
| [31] |
நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர் பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்
| [32] |
உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய
| [33] |
சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும் நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்
| [34] |
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்
| [35] |
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது
| [36] |
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்
| [37] |
பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை
| [38] |
மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்
| [39] |
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி
| [40] |
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும் காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி
| [41] |
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து
| [42] |
காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார் ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்
| [43] |
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர் தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்
| [44] |
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார் ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு
| [45] |
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப் பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்
| [46] |
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார் பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்
| [47] |
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும் பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய
| [48] |
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்
| [49] |
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள் மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்
| [50] |
பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும் கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய
| [51] |
கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு
| [52] |
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர் மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய
| [53] |
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர் வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து
| [54] |
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்
| [55] |
பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்
| [56] |
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த
| [57] |
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற
| [58] |
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர் ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா
| [59] |
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும் மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்
| [60] |
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும் ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய
| [61] |
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய
| [62] |
சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்
| [63] |
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
| [64] |
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்
| [65] |
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர் அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை
| [66] |
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்
| [67] |
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்
| [68] |
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்
| [69] |
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே
| [70] |
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும் தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய
| [71] |
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய
| [72] |
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் காதலால்
| [73] |
புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு
| [74] |
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து
| [75] |
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த
| [76] |
யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும் சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்
| [77] |
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும் துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்
| [78] |
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்
| [79] |
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக் காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய
| [80] |
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில் ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்
| [81] |
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற் சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்
| [82] |
நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள் நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய
| [83] |
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி
| [84] |
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு
| [85] |
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்
| [86] |
ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண் கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்
| [87] |
புகலி வளநகருட் பூசுரர் புக் காங் கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்
| [88] |
வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம் ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்
| [89] |
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்
| [90] |
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே
| [91] |
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப் பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்
| [92] |
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய
| [93] |
வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத் தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்
| [94] |
தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற் போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்
| [95] |
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில் இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்
| [96] |
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம் வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த
| [97] |
கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின் வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்
| [98] |
தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும் சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற
| [99] |
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில் ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
| [100] |
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்
| [101] |
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்
| [102] |
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த
| [103] |
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித் திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி
| [104] |
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத் திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்
| [105] |
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய
| [106] |
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்
| [107] |
பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய
| [108] |
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம் மாடணையக் கொண்டு வருதலுமே கூடி
| [109] |
நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த
| [110] |
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண் டாங் கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த
| [111] |
பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு
| [112] |
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத் தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்
| [113] |
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்
| [114] |
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த
| [115] |
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப் புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு
| [116] |
வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்
| [117] |
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும் சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய
| [118] |
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்
| [119] |
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும் பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்
| [120] |
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே
| [121] |
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்
| [122] |
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார் காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து
| [123] |
வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்
| [124] |
காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்
| [125] |
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்
| [126] |
தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப் பாராமை சாலப் பயன் என்பார் நேராக
| [127] |
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்
| [128] |
ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள் வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்
| [129] |
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல் தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்
| [130] |
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால் பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்
| [131] |
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார் கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்
| [132] |
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்
| [133] |
இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற
| [134] |
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்
| [135] |
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே
| [136] |
பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின் நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற
| [137] |
ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல் ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்
| [138] |
ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன் பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்
| [139] |
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார் மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்
| [140] |
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன் சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த
| [141] |
கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு
| [142] |
பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான் ஒங்கொலிசேர் வீதி உலா.
| [143] |
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400